நக்கீரன் பதிப்பகம்
நீதிக்கட்சி வரலாறு 1916 - 1944 (இருபெரும் தொகுதிகள்)
நீதிக்கட்சி வரலாறு 1916 - 1944 (இருபெரும் தொகுதிகள்)
Couldn't load pickup availability
நீதிக்கட்சி’ என்று பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டாலும் 1916-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.’ பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா தனது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் இருந்தபோது, சமூக விடுதலைக்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ‘நாட்டின் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்களை ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு நாட்டுக்கு அரசியல் விடுதலை தரப்பட்டால், அது மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே பயன்படும்’ என்று சொல்லி சமூக விடுதலையை முன்னெடுத்த அமைப்பு இது.
நாட்டில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் (1920-ம் ஆண்டு) நீதிக்கட்சி சென்னை ராஜதானியில் ஆட்சியைக் கைப்பற்றி செய்த பல்வேறு சீர்திருத்தங்கள் மலைப்பைத் தருகின்றன. அந்தக் கட்சியே தொடர்ந்து இரண்டு மூன்று தேர்தல்களில் வென்றது. தொடர்ச்சியாக ஆட்சியை வைத்திருந்தால், நன்மையைப்போலவே எதிர்மறையான விளைவுகளும் அதிகமாக இருக்கத்தானே செய்யும். பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லாத மனிதர்கள் சிலர் இதன் முக்கியஸ்தர்களாக மாறியபோது, 1935-ம் ஆண்டு பெரியார் ஈ.வெ.ரா இதன் தலைவராக ஆகிறார். அதில் இருந்து இந்தக் கட்சிக்கு மீண்டும் ஓர் உற்சாகம் கிடைக்கிறது. ஆனாலும் திருந்தாத சிலரை விலக்கி வைத்துவிட்டு, மற்றவர்கள் துணையுடன் 1944-ல் சேலம் மாநாட்டில் தொடங்கப்பட்டதுதான் திராவிடர் கழகம். இந்த வரலாற்றுகளைச் செறிவுடன் கொடுத்துள்ளார் க.திருநாவுக்கரசு.
ஒரு வரலாற்றுப் புத்தகத்துக்கானத் தொடர்ச்சியான தகவல்களும் அந்த நிகழ்வுகளுக்கான காரணத்தைச் சொல்வதற்கான விளக்கங்களும் விவாதம் தேவையான இடங்களில் விமர்சனங்களும்.. என பல்வேறு பரிமாணங்கள் கொண்டதாக இந்தப் புத்தகம் இருக்கிறது. இந்தக் காலகட்டத்துக்கு அவசியமான வரலாறு இது.
திராவிட இயக்க நூற்றாண்டு,திராவிடக் கட்சி ஆட்சியில் அமர்ந்த ஐம்பதாவது ஆண்டு போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுத் தருணங்களைத் தமிழகம் கடந்திருக்கும் நிலையில்,திராவிட இயக்கத்தைப் புரிந்துகொள்ள அதன் முன்னோடிகளைப் பற்றி வாசிப்பது முக்கியமானது.அந்த வகையில் திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியான நீதிக்கட்சியின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான நூல் இது.திராவிட இயக்க வரலாற்றாசிரியர் க.திருநாவுக்கரசின் பல்லாண்டு கால உழைப்பில் வெளியான நூல் இது.



