ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெரியார் உலக அறிஞர்களின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க மாண்புமிக்கப் பேரறிவாளனாவார். அப்பேரறிவாளன் இவ்வுலகில் தோன்றியது இவ்வுலகுக்குப் பெருமை. இந்தியாவில் தோன்றியது இந்தியாவுக்குப் பெருமை. தமிழ்நாட்டில் தோன்றியது தமிழ்நாட்டுக்குப் பெருமை, ஈரோட்டில் தோன்றியது ஈரோட்டுக்குப் பெருமை, பெருமையினும் பெருமை, பெறுதற்கரிய பெருமை யாகும். ஞாயிறுவால் ஞாலம் ஒளி பெற்றது போல், திங்களால் வானம் வனப்புற்றது போல், மலரால் நார் மணம் பெற்றது போல், ஆற்று நீரால் மண் வளம் பெற்றது போல், பெரியாரால் ஈரோடு சிறப்புப் பெற்றது. அப்பீடுடைய பேரறி வாளனை ஈன்றெடுத்த ஈரோடு என்றும் அழியாப் புகழோடு திகழுமன்றோ?
ஈரோட்டில் முகிழ்த்த பகுத்தறிவுப் பேரொளி தமிழகமெங்கும் பரவிப் பின்னர் இந்தியா முழுவதும் பரவி, அடுத்து உலகம் யாங்கனும் பரவ முற்பட்டுள்ளது.
அறிவு என்பது இயற்கை அறிவு, செயற்கை அறிவு என இருவகைப்படும். அவற்றை ஆங்கிலத்தில் Wisdom, Knowledge என்பர். Wisdom என்றால் மெய்யறிவு, அறிவு நுட்பம், அறிவுடைமை எனப் பொருள்படும். அதாவது இயற்கையாக அறிவினைப் பெற்றிருப்பது. Knowl- edge என்றால் கல்வி கேள்விகளால் பெறப்பட்ட அறிவு. அதாவது, "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என்பது போல் பற்பல நூல்களைக் கற்று அவற்றின் வாயிலாக அறிவினைப் பெறுவது. பெரியார் நான்காம் வகுப்புவரைதான் பள்ளிக்குச் சென்று படித்தார். எனவே அவருக்குக் கல்வியறிவு கிட்டவில்லை. ஆனால் அவர் இயற்கையாகவே நுண்மாண் நுழைபுலம் படைத்தவராகத் திகழ்ந்தார். அவ்வெழில் நலத்தையே நாம் பேரறிவு என இயம்புகிறோம்.
தமிழ்நாட்டில் பற்பல அறிஞர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் அவர்களால் கிட்டிய பயன் யாது? பெரியார் தோன்றினார்; தமிழ்நாட்டைப் பார்த்தார்; தமிழனைப் பார்த்தார். தமிழன் நாயினும் கீழான வாழ்க்கை வாழ்வதைக் கண்டு உளம் கொதித்தார். ஏன் தமிழன் இத்தகைய வாழ்க்கை வாழ்கிறான்? அதற்கு யார் பொறுப்பு? அது யார் செய்த தவறு? பெரியார் ஆராய்ந்தார், உன்னிப்பாக எண்ணிப்பார்த்தார். அதற்குப் பொறுப்பு நம் முன்னோர்களே; நம் முன்னோர்கள் செய்த மாபெரும் தவறே என உணர்ந்தார்.
எனவே அவர் தமிழனை நோக்கி வினா எழுப்புகிறார். ஏ, தமிழா நம் முன்னோர்கள் பொறுத்துக்கொள்ள முடியாத (மன்னிக்க முடியாத) மாபெரும் தறினை செய்துவிட்டனர். இன்று நாமும் அதே தவறினைச் செய்து மானமிழந்து நிற்க வேண்டுமா?
நம் முன்னோர்கள் தவறான வழியில் சென்றுவிட்டனர். இன்று நாமும் கண்களை மூடிக்கொண்டு அதே வழியில் சென்று படுகுழியில் வீழ்ந்து நம்மை அழித்துக்கொள்ள வேண்டுமா?
நம் முன்னோர்கள் ஒப்புயர்வற்ற நம் பண்பாட்டையும் ஓங்கி உயர்ந்த வளமான நம் ஒண்டமிழையும், போற்றுதற்குரிய நம் பழக்க வழக்கங்களையும் அழித்துவிட்டு, நம்மை சூத்திரன் என இழிவுபடுத்திய ஆரியர்களின் பண் பாட்டையும் மொழியையும் சமயக் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் உயர்வானவை என ஏற்று, ஆரியர்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை நடத்தித் தங்களை அழித்துக் கொண்டனர். இன்று நாமும் அதே போன்று ஆரியர்களுக்கு அடிமையாகி வாழ்க்கை நடத்தி நம்மை நாமே அழித்துக் கொள்ள வேண்டுமா? என்ற வினாக்களை எழுப்பி சினம் கொண்ட ஏறு போல் எழுந்து நின்றார். தமிழனுக்கு மறுவாழ்வு கொடுத்து வாழவைக்க வழியென்ன என ஆய்ந்தார். தமிழனுக்குத் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊட்டினால்தான் அவன் தலைநிமிர்ந்து வாழ வழி ஏற்படும் என உணர்ந்தார். எனவே தன்மான இயக்கத்தையும் திராவிடர் கழகத்தையும் தோற்றுவித்தார்.
உலகம் வியக்கும் வண்ணம் ஓயாது உழைத்தார். தன் இறுதி மூச்சுள்ளவரை அயராது பாடுபட்டார். உண்மையாகத் தொண்டாற்றினார். உறுதியுடன் செயல் பட்டார். அவர் செல்வந்தராயிருப்பினும் செல்வம் சேர்க்க விழையவில்லை. அவரை நாடிப் பல பொறுப்புக்கள் வந்தபோதும் அவற்றினை உதறித்தள்ளினார். அத்தகைய பெருந்தகையை, பேரறிவாளனை இந்நாள் வரை யாரும் கண்டதில்லை, இனிமேலும் காண்பதரிது. அப்பேரறிவாளன் முகிழ்த்த ஈரோட்டில் பிறந்த நான் அவருடைய பேரறிவினை எடுத்துக் காட்டுகளோடு எடுத்தியம்புவது என் வாணாளின் கடமையெனக் கருதியே இந்நூலினை உங்கள் முன் வைக்கிறேன்.
பெரியார் எத்தகைய பேரறிவு கொண்டவர், அப்பேரறிவால் அவர் ஆற்றிய தொண்டுகளென்ன, அத்தொண்டுகளால் நாம் பெற்ற பயன்கள் என்ன என்பன பற்றி இந்நூலில் விளக்கிக் கூறியுள்ளேன். இந்நூலினை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுமென விழைகின்றேன்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு” என இயம்புவான் பாரதி. வள்ளுவனை மட்டுமல்ல பெரியாரையும் இவ்வுல கினுக்கே தந்து வான்புகழ் கொண்டது தமிழ்நாடு என செப்பின் அது மிகையன்று.