அருள் பாரதி பதிப்பகம்
மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்
Couldn't load pickup availability
இந்தியாவிற் குடிபுகுந்த ஆரியர் முதன் முதல் தங்கியிருந்த இடம் சிந்துவெளியே யாகும். அவ்விடத்திற்றான் அவர்கள் ரிக்வேதம் பாடினர். அவர்கள், அங்குத் தங்கட்குமுன் இருந்த பண்டை மக்களோடு போர் செய்ய வேண்டியவர் ஆயினர். ‘அப்பகைவர் நல்ல நகரங்களை அமைத்துக்கொண்டு மாட மாளிகைகளில் சிறந்த செல்வப்பெருக்கத்தோடு வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேள்வி செய்யாதவர்கள்; உருவவழிபாடு கொண்டவர்; தட்டை முக்குடையவர்; குள்ளர்கள்; மாயா ஜாலங்களில் வல்லவர்கள்; வாணிபத் திறமை உடையவர்கள்’ என்றெல்லாம் ரிக்வேதம் கூறுகின்றது. இக்குறிப்புகளால் ஆரியர்க்கு முற்பட்ட இந்திய மக்கள் சிந்து வெளியில் சிறந்த பட்டணங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர் என்னும் செய்தி புலனாகின்றது. இஃது உண்மையே என்பதை உணர்த்தவே போலும், சிந்துவெளியில் உள்ள ஹரப்பாவும் மொஹெஞ்சொ-தரோவும் அறிஞர் கண்கட்குக் காட்சி அளித்தன.1920 ஆம் ஆண்டில் பஞ்சாப் மண்டிலத்தில், மான்ட் கோமரிக் கோட்டத்தில், ராவி - சட்லெஜ் யாறுகளுக்கு இடையில், லாஹூர் - முல்ட்டான் புகை வண்டிப்பாதையில் ஹரப்பா என்னும் ஆராய்ச்சிக்குரிய இடம் அகப்பட்டது. 1922இல் சிந்து மண்டிலத்தில் உள்ள லர்க்கானாக் கோட்டத்தில் 2100 செ.மீ. உயரம் உடைய மண்மேடு ஒன்று கண்டறியப்பட்டது. அதனுள் புதைந்துள்ள நகரமே மொஹெஞ்சொ-தரோ என்பது. அம்மேட்டின்மேல் நெடுந்தூண் ஒன்று நின்றிருந்தது. இவ் விரண்டு இடங்கட்கும் இடைப்பட்டதொலைவு 640 கி.மீ. ஆகும். இரண்டு இடங்களிலும் சிறிதளவு தோண்டிப் பார்த்த பொழுது, ‘இவை ஆராய்ச்சிக்குரிய இடங்கள்’ என்பதை அறிஞர் அறிந்து கொண்டனர்
