தமிழர் திருமணமும் இனமானமும் - முன்னுரை

தமிழர் திருமணமும் இனமானமும் - முன்னுரை

தலைப்பு

தமிழர் திருமணமும் இனமானமும்

எழுத்தாளர் க.அன்பழகன்
பதிப்பாளர்

பூம்புகார் பதிப்பகம்

பக்கங்கள் 493
பதிப்பு நான்காம் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.300/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/thamizhar-thirumanamum-inamaanamum-poompukar.html

 

முன்னுரை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்ற இரண்டாம் ஆண்டு முதல் (1940) தமிழ் ஆர்வலர், தன்மான இயக்கத்தார், இந்தி எதிர்ப்பு மறவர்கள், உடன் பயின்றோர் ஆகியோரின் சீர்திருத்தத் திருமணங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் வாய்ப்புப் பெற்றவன் நான். எனது அருமைத் தந்தையார் சிதம்பரம் மு. கலியாணசுந்தரனார், பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் இயக்கத்தில் பங்கேற்று, அப்படிப்பட்ட திருமணங்களைத் தலைமை ஏற்று நடத்தி வைத்தவ ராதலின், அவரளித்த ஊக்கத்தால் எனது பேச்சுத் தொண்டும் வளர்வதாயிற்று. பின்னர் திராவிடர்க் கழக நண்பர்கள், திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் பலரது திருமணங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு தொடர்ந்தது.

தன்மானத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், தமிழவேள் பி.டி. இராசன், பல்கலைப்புலவர் கா.சு. பிள்ளை, டாக்டர் அ. சிதம்பர நாதன், டாக்டர் மு. வரதராசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை, டாக்டர் இலக்குவனார், பட்டுக் கோட்டை அழகிரிசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், மூவாலூர் மூதாட்டி இராமாமிர்தம், சிந்தனை சிற்பி சி.பி. சிற்றரசு, குத்தூசி எஸ். குருசாமி, முத்தமிழ்க் காவலர் (கி.ஆ.பெ.) ஆகியோருடனும் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர், கழக முன்னணித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள், பலகட்சித் தலைவர்கள் முதலான பலருடனும் திருமணங்களில் கலந்து கொண்டுள்ளேன்.

ஆங்காங்கு எனது உரையினைக் கேட்டு மகிழ்ந்த நண்பர் பலர் அந்த உரைகளைத் தொகுத்து வெளியிடுமாறு விரும்பினர். நானும் இசைந்தேன். ஆனால் ஒவ்வொரு திருமணத்திலும் ஆங்காங்குள்ள சூழலுக்கேற்பப் பேசு வதாலும், சில செய்திகள் திரும்பத்திரும்ப இடம்பெற நேருவதாலும், தொகுப்பினும் அது கொள்கை விளக்கும் நோக்கத்தினை நிறைவு செய்யாது என்று கண்டேன்.

தொடக்க ஆண்டுகளில் நான் கலந்துகொண்ட மன்றல்களில் திருமணங் கொண்டோரின் மக்கள் பலரின் திருமணங்களை நிகழ்த்தும் சீரும்; சிலரின் பேரன் பேத்திகளின் மணங்களில் வாழ்த்தும் சிறப்பும்; மேலும் பல நண்பர்களின் மணிவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்திடும் பெருமையும் எனக்கு வாய்த்துள்ளமை ஒரு தனி உவகையும் பெருமிதமும் அளிக்கிறது.

இன்றோ திருமணங்கள் பலவற்றிற்கு அழைக்கப்படும் போது, வேறு திருமணங்களுக்கு இசைந்துவிட்ட நிலை யிலும், பிற கடமைகளாலும், விருப்பமிருந்தும் செல்ல வியலாதவனாகின்றேன். எனது அன்பார்ந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்து மகிழ்கின்றேன். என்றாலும் ஒரு திருமணத்தில் பேசக்கூடிய கருத்துக்களை, மண மக்களும் மற்றவர்களும் அறிந்துகொள்ளச் செய்திட ஏற்றதொரு நூல் பயன்படும் என்று உளங்கொண்டேன்.

இந்த நூலை எழுத முற்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகின்றது. இடையீடுகள் பல. அதனால் விட்டுவிட்டு எழுத நேரிட்டதால், தலைப்புக் கேற்றதொரு ஆய்வு நூல் முறையில், சான்றுக்கான விவரங்களை அடிக் குறிப்பு களாகத் தந்து வரைய முடியவில்லை எனினும், தகுந்த ஆதாரமின்றி எதுவும் கூறப்படவில்லை. படிப்பவர் எளிதாகத் தெளிவடைதற்கு ஏற்ற வகையில், அறிஞர் பலரது சிந்தனைகளை எடுத்துக் காட்டியும், எனது எண்ணம் வடிவு கொண்டவாறும் இந்த நூல் வரையப் பட்டுள்ளது. இதன் பொருள் இலக்கிய வண்ணம் பெறக்கூடியது. எனினும் சங்கத் தமிழ் இலக்கியச் செல்வத்தையும், அகப்பொருள் காதல் காட்சிகளையும் விவரிக்காமல் வரைந்ததன் நோக்கமே, இலக்கியச் சுவையில் ஈர்க்கப்பட்டுக் குறிக்கோளின் தாக்கம் குறைந்துவிடக்கூடாது என்பதே.

'தமிழர் திருமண முறை', 'சங்ககாலத் தமிழர் நாகரிகம்', 'தமிழர் வாழ்வில் காதல்', 'அகப்பொருள் விளக்கம்', 'தொகை நூல்களில் - காதல் காட்சிகள்', 'திருமணம் நிகழ்த்தும் முறை', 'வாழ்க்கைக் கலை', என்பன போன்ற தலைப்புக்களில் வெளிவந்துள்ள ஏடுகள் பல. அவை 'திருமணம்' தொடர்பான கருத்துக் களைத் தலைப்புக்கு ஏற்ற பெற்றியில் விவரிப்பன. சமுதாய வாழ்வில் திருமணத்திற்குள்ள தலையாய இடத்தை மட்டுமேயல்லாமல், தமிழர்களின் மனத்தில் பதிந்துள்ள பல எண்ணங்கள் காலப்போக்கில் நம்பிக்கை யாக வளர்ந்து, உரம்பெற்று அவர்களது அறிவைச் சிறைப்படுத்தி, அவர்தம் வாழ்வை, உரிமை உணர்வு தலையெடுக்காத நிலையில் அழுத்தி வைத்திருப்பதற்கான பல காரணங்களையும் ஒல்லும் வகையால் விளக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த நோக்கத்தில் இந்த நூல் முழுமை எய்தாவிடினும், பெருமளவில் பயன்தரக் கூடும் என்று நம்புகிறேன்.

தொன்மை சான்ற தமிழர்களின் பண்பட்ட நாகரிகமும், பெருமைக்குரிய வாழ்வும், வியத்தற்குரிய மொழியும், உலகோர் வாழ்வியல் தழுவிய சிந்தனையும், சமயப் பொதுநோக்கும், மனிதகுலமே ஒரு குடும்பம் என்னும் தெளிவும், இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டு கட்கு முன்னர் ஆரியர்கள் தென்னகத்தில் குடிபுகத் தொடங்கியது முதல், அவர்தம் நாகரிகத் தாக்குரவால், காலப்போக்கில் உருக்குலைந்தது. தமிழினம் தன் தனித்தன்மையும் தொல்மரபும் இழக்க நேரிட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுக் கால அளவில் பரவிய வைதிக வருணதருமக் கோட்பாடுகளால் தமிழினம் நிலை இழந்து, தடம் மாறிச் சீர்குலைந்தது. அந்தச் சீரழிவின் விளைவுகள் இந்த நூற்றாண்டின் துவக்கத்திலேயே தெளிவாக அறியப்பட்டன. வரலாற்றுப் பேராசிரி யர்கள், மொழிநூல் ஆராய்ச்சியாளர், அகழ்பொருள் ஆய்வினர், சமுதாய வாழ்வியல் ஆய்வாளர் முதலான பலதுறையினர், அவரவர் துறைகளில் கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பே அது.

காதல் வழிப்பிணைப்பு கடிமணமாக உருக்கொண்ட காலத்தில், திருமணம் சில அடையாள நிகழ்ச்சிகளைக் (கரணச் சடங்குகளைக்) கொண்டதாயிற்று. மங்கல மடந்தையர் முன்னின்று நிகழ்த்திப் பெரியோர்கள் வாழ்த்த முடிந்த திருமணம், பின்னர் நாட்டாண்மையர், அருமைக்காரர் நடத்துவதாகிச் சடங்குகள் பெருகின. தொன்னாளில் பல்வேறு இனக்குழுவினராக வாழ்ந்த மக்களிடையே மந்திரம் தெரிந்தவர் எனக் கருதப்பட்ட பூசாரிகள் இடம் பெற்றனர். அவர்கள் அவரவர் இனத்தவர் ஆதலின், தொழில்வழி மதிப்பன்றிப் பிறவி உயர்வு கருதப்படும் நிலை அன்று இல்லை.

தமிழ்நிலத்தில் ஆரியம் கால்கொண்டு, நாடாண்ட மன்னர்களிடம், குறிப்பாகப் பிறமொழிச் சார்பு மன்னர்களிடம் தனி உறவு வளர்த்துச் செல்வாக்கு அடைந்து தமது வைதிக வழி முறைகட்கு ஆதரவு பெற்று, கோயில் அர்ச்சகராக உயர்ந்து தமது பிறவி உயர்வை நம்பிடவைத்து, பல்வேறு வகையான தானங்கள் பெற்று, வளவாழ்வும் எய்திய நிலையால், அவர்களே சமுதாயத் தின் குருமார்களாகவும், ஆன்மீகத்துறையில் மேலுலக வழிகாட்டிகளாகவும் உயர்ந்து விட்டனர். வைதிக மத வழியில் பரப்பப்பட்ட கற்பனைப் புராணக் கதைகளால் அவர்தம் பிறவி உயர்வும், பிராமண சாதி மகிமையும் மதிக்கப்படலாயிற்று. பிற பூசாரிகளும் குருமார்களும் பெறாத தனி உயர்வும் பெருமதிப்பும், வடமொழி வைதிக மத வழிப்பட்ட 'பிராமணர் பெற்றனர். அதன் விளைவே தமிழர்களின் திருமணத்திலும், நீத்தார் நினைவு நிகழ்ச்சியிலும் புரோகிதர்களை அழைக்கும் மனப்பான்மை வளர்ந்தது. அவ்வாறு செய்வதன் மூலம் வைதிக வருண முறையால் இழிவடைந்த தமிழர், தமது குலத்தினை - உயர்சாதிப் பிறவி ஆக்குவதாக, ஒரு போலித்தனமான. எண்ணமும் உருவாயிற்று.

தான் பிராமணன் என்பதையும், உலகம் தனக்காக என்பதையும், தெய்வம் தனக்குதவவே என்பதையும் உறுதிப்படுத்திக் காட்டும் ஒரு பாவனை வளர்ப்பதும், இவைகளைப் பிறர் பொருட்படுத்தாது, பிராமணர் கட்கே அவை உரியவை என்று மதித்திடச் செய்ய ஏதுவாக, மற்றவர்களிடம் 'உலகம் மாயை' என்னும் தத்துவம் பரப்புவதுமே பிராமணர்களின் வைதிக மத வழிக் கோட்பாடு ஆயிற்று.

அதை நம்பியதால் தமிழன் தாழ்ந்தான், ஆரியன் உயர்ந்தான்; அடியார்க்கும் அடியாராய்த் தன்னைத் தானே தாழ்த்திக்கொண்ட தமிழன், ஆரிய வருணப் பிரிவில் கீழ்ச்சாதி - 'சூத்திரன்' என்று இழிபிறவியாகக் கற்பிக்கப்பட்ட வழக்குக்குப் பலியானான்.

"இந்த எண்ணம் இதிகாச புராணங்களால் பக்தி யுணர்வோடு மக்கள் மனதில் ஊன்றப்பட்ட வகையால், இறைப்பற்றாளரான பெரும்பான்மைத் தமிழர்கள், தமது பிறவிக்கு ஈடேற்றம் தேடும் ஆர்வத்தில் நிரந்தர 'அடிமைப் பிறவி'யாயினர்.

எசமான் சாதியினர் துறைகள் தோறும் ஏற்றம் பெற்றதும் - அடிமை சாதியினர் கல்விகூடப் பெறாத வர்களாய் ஆனதும், இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது. அந்த நிலையைப் பார்த்துப் பார்த்து வேதனை கொண்ட உள்ளங்களின் குமுறல்தான் நீதிக்கட்சியின் உரிமைக் குரலாக ஒலித்தது. திராவிடர் இயக்கம் தோன்றியது.

சமுதாய வாழ்வில் பிறவி அடிமைத்தனத்திற்கு ஆளாகியுள்ள மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கை களை ஒழித்தாலன்றித் தமிழன் மனிதனாகத் தலை நிமிர முடியாது என்பதை உணர்ந்த சிந்தனையாளரின் முழக்கந் தான் சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கமாக உருக் கொண்டது.

தமிழர்கள் ஓர் இனம் - திராவிட இனம் என்பதை உணரச் செய்தால்தான் அவர்கள் தன்னம்பிக்கை கொள்ளலாகும் என்பதைத் தெளிந்த நிலையில் வடிவு கொண்டதே திராவிடர்க் கழகம். தமிழ் முதலான அனைத்து மொழிகட்கும் சமக்கிருதமே தாய்; அதன் துணையும் வடசொற் கலப்பும் இன்றித் தமிழ் இயங்காது என்னும் புனைந்துரையால் விளைந்த இழிவையும் பழியையும் துடைத்து, தமிழ்மொழி தனித்தியங்க வல்லது என்னும் உண்மையை நிலைநிறுத்தவும், அதன் வளம் பெருக்கவும் தோன்றியதே தனித்தமிழ் இயக்கம். வடவரின் வழிப்பட்ட இந்தி ஆதிக்கத்தால் தமிழ் கெடும்; வைதிகம் மேலும் உரம் பெற்றுத் தமிழரின் இனமானம் பறிக்கப்படும்; திராவிடரின் உரிமை வாழ்வு ஒடுக்கப்படும் என்றுணர்ந்த தமிழறிஞர்கள், தன்மான இயக்கத் தார், நீதிக்கட்சியினர் ஆகியோர் எழுப்பிய போர்க் குரலே இந்தி எதிர்ப்பு இயக்கமாகியது.

தொன்னாள் முதல் தமிழர்கள் இசைக்கலையில் தேர்ந்தவர்களாயிருந்தும், பக்தி வழியில் தெலுங்கு இசையை வளர்த்து, அதையே இசை அரங்குகளி லெல்லாம் பாடுவதை வழக்கமாக்கி, தமிழிசையைத் தமிழர்களே மறக்கும் நிலையை வைதிகர்கள் உருவாக்கியது கண்டு, அந்தப் போக்கினைத் தடுத்து நிறுத்தத் தோன்றியதே தமிழிசை இயக்கம்.

திராவிட இனமானமும், மொழியுரிமையும் காத்திட, தமிழ் நாட்டு மக்கள் முன் எடுத்துமொழியப்பட்ட சுயமரி யாதை உணர்வு; பகுத்தறிவு நோக்கு; தமிழ் மொழிப் பாதுகாப்பு; மாநில அரசின் தன்னாட்சி உரிமைகள்; பொருளியல் சமதர்மம் ஆகிய கொள்கைகளின் பரிணாம வளர்ச்சியின் மொத்த வடிவம் ஆக விளங்குவதே அறிஞர் அண்ணாவின் அறிவாற்றலால் மலர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம். அதன் பின்னர் விளைந்த கட்சிப் பிரிவும் அதன் குறிக்கோளும் திராவிட இயக்கத்தின் கொள்கை வளர்ச்சியினாலோ, இலட்சிய நிறைவேற்றத்துக்காகவோ ஏற்பட்ட மாற்றம் அல்ல.

திராவிட இனத்தின் இனமானம் காக்கும் மூச்சு, தன்மான உணர்வே. அதன் உயிராக நிலவுவது தாய்மொழிப் பற்று. அதன் உடம்பு திராவிடர் இயக்கம்; அமைப்பு. இந்த அடிப்படையை மறவாது காத்திடும் கடமையுணர்ந்த பாசறையாக விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான் தன்மான உணர்வு தழைக்கும் வழியாகத் தந்தை பெரியாரால் தோற்றுவிக் கப்பட்ட சுயமரியாதைத் திருமண முறையைப் பரப்பு வதை ஒரு கடமையாக மேற்கொண்டுள்ளோம்.

திருமணங்களில் வைதிக முறையைக் கைவிட்டுப் புரோகிதரையும் வடமொழியையும் விலக்கிச் சீர்திருத்த முறையை ஏற்று நடத்துவதன் நோக்கத்தையும் பயனையும் விளக்குவதும், அப்படிச் செய்வதற்குத் தயங்குவோரின் ஐயங்களையும் அச்சங்களையும் நீக்குவதும் இந்த நூலின் நோக்கமாகும். தமிழர்களின் இனமானம் காத்திட, சில நூற்றாண்டுகள் முன்னர் இடைப்புகுந்த வைதிகப் புரோகிதச் சடங்கு முறையைக் கைவிடுவதன்றி, வேறு வழியில்லை என்பதை அறிந்தவர்களுங்கூட, இறையருள் சித்திப்பதாக நம்பியும், மதவழி என்று மயங்கியும், மரபு என்று உண்மை தெளியாமலும், வைதிகப் புரோகித முறையை இன்றும் பின்பற்றுவதைக் காண்போர் இந்த நூலின் தேவையை உணர்வர். தமிழ் உணர்வும், பகுத்தறிவு நோக்கமும் கொண்ட சீர்திருத்தத் திருமணமுறை, ஒரு கட்சிக்கு மட்டுமே உரியதாகாது. இதனைப் பொதுவுடைமைக் கட்சி, காங்கிரசு முதலான பல கட்சித் தலைவர்களில் சிலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இயற்கை நியாயம் உணர்ந்த சில பிராமண அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். பகுத்தறிவும், சுயமரியாதையும், தமிழும் அனைவருக்கும் பொதுவே!

வைதிகப் புரோகிதர்களையோ, பிராமணர்களையோ தனிப்பட்ட முறையில் வெறுப்பதால் பிறந்ததல்ல இக்கொள்கை. ஆரிய இனம் என்பதற்காக, பிராமணர் களை வெறுப்பதற்கும் ஒறுப்பதற்கும் தோன்றியதல்ல இந்த இயக்கம். வைதிகம் போற்றும் பிராமணர்களை விட, வைதிகத்தைப் பின்பற்றவும் ஆதரித்திடவும் தயங்காத தமிழர்கள் மிகப் பலர் என்பது நாமறிந்ததே. இந்த முறை புரோகிதர்களின் தொழிலைக் கைப்பற்று வதற்காகத் தோன்றியதும் அல்ல. மாறாகத் தம்மை உணராத தமிழர்கள் தம்மை உணர்ந்து, மானமுள்ள மனிதராகத் தலைநிமிரச் செய்யவும், தமிழராக வாழச் செய்யவுமே ஆகும்.

பல்லக்கில் அமர்ந்து பவனிவர ஒரு பிறவி; அவர்தம் கட்டளைப்படி பல்லக்குத் தூக்குவதே புண்ணியம் என்று சுமை தாங்கப் பிறிதொரு பிறவி! தேரில் அமர்ந்து ஆணையிட ஒரு பிறவி; அந்தத் தேர் வடம் பிடித்து இழுத்துப் புண்ணியந்தேட மற்றொரு பிறவி!; வைதிக தரும உபதேசம் நடத்தி வயிறு பிழைக்க ஒரு பிறவி; அதை நம்பி நாளும் பாடுபட்டும் வாழ்வு பெறாது நலிந்திட வேறொரு பிறவி! என்னும் அநீதியைத் தெய்வக் கட்டளை என்று நம்பி ஏற்றுக் காலமெல்லாம் ஏமாந்து மாயும் தமிழர்களைத் தெளிவடையச் செய்வதே இதன் நோக்கம்.

என்னைப் பொருத்தவரையில், பிராமணர்கள் என் பதற்காக எவரையும் நான் வெறுக்கவும், கண்டிக்கவும் காரணமில்லை. ஏனெனில், நான் எவரையும் அவரது பிறவி அடிப்படையில் பார்ப்பனர் என்றோ, பறையர் என்றோ மனதார மதிப்பதுமில்லை; ஏற்பதுமில்லை. பார்ப்பனரிலும் பகுத்தறிவு வழிநிற்கும் முற்போக்கு எண்ணங்கொண்டோர் சிலர் உண்டு என்பதையும் நான் நன்றியோடு உணர்கிறேன். பாரதியாரின் பாடல்களை யும் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளையும் படித்து உணர்வோர், பார்ப்பனர் உட்பட எவராயினும் கொள்ள வேண்டிய உணர்வே அது. பிறப்பை ஒட்டிய மதிப்பீடுகளை மறந்தும் துறந்தும், எல்லோரும் ஓர் நிறை, ஓர் விலை, ஓர் சமம் என்பது நடைமுறையில் வரவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட பகுத்தறிவு நெறியின்படி எவரையும் தனிப்பட்ட முறையில் வெறுப்பதற்கு நியாயமில்லை.

"தமிழன் எவருக்குந் தாழான் - தமிழன் எவரையும் தாழ்த்தான்'' என்னும் பொதுமை நிலை உருவாக்கிடவும், எல்லோரும் ஓர் குலமாய், ஓர் இனமாய் வாழ்ந்திடத் தடையாகும் சாதி வேற்றுமைக் கேடுகளை ஒழித்திடவும் தமிழர்கள் முன்வரவேண்டும் என்பதே எனது விழைவும் வேண்டுகோளுமாகும்.

இந்த ஏட்டில் இடம் பெற்றிருக்கக்கூடிய குறைகள் எவையாயினும் சுட்டிக்காட்டப்படின், அவற்றுள் தக்கவற்றை ஏற்றுக்கொள்வேன்.

இந்த ஏட்டின் படியைப் படித்துப் பார்த்துத் தனது கருத்தை வழங்கிய என் அன்புக்குரிய டாக்டர் மா. செல்வராசன் அவர்கட்கும், எனது இளவல் பேராசிரியர் க. பாலகிருட்டிணனுக்கும், தட்டச்சுப்படி செய்த என் தம்பி கு. ஆனந்தனுக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த நூலை வெளியிட ஆர்வமுடன் முன்வந்த பூம்புகார் பதிப்பக உரிமையாளர் எம்.ஜே. பிரதாப்சிங் அவர்கள், பதிப்பகத்தின் பெயருக்கேற்ப, தமிழினத்தின் பழம்பெருமை மீட்கப்பெற்று, அந்தநாள் பூம்புகாரெனத் திகழ வேண்டும் என்னும் விழைவினர். அவருக்கு என் நன்றி உரித்தாகும். இந்நூலைச் சிறப்பாக வெளியிடவும், சீருற அமைத்திடவும் உறுதுணையான பேராசிரியர் டாக்டர் ப. ஆறுமுகம் அவர்களின் ஆர்வம் பாராட்டுக் குரியது. நூலின் முகப்பு எழிற்கோலம் கொள்ள ஏதுவாக ஓவியம் தீட்டியளித்த - திரு. மணியன் செல்வனுக்கும் நன்றி,

எனது கெழுதகை நண்பரும் இலட்சியப் பயணத்தின் உறுதுணையும், தமிழினத் தலைவருமான டாக்டர் கலைஞர் அவர்கள் பல்வேறு கடமைகளுக்கிடையிலும், வழங்கியுள்ள ஆர்வமளிக்கும் அணிந்துரைக்குச் சொல்லளவால் 'நன்றி' உரைத்தல் ஒல்லாது. இந்த நூல் எந்த அளவில் தமிழின மக்களின் விழிப்புக்கும் வாழ்வுக்கும் எழுச்சிக்கும் பயன்படுமாயினும் - அதுவே என் உளம் ஊறும் நன்றி கொளலாகும் வடிவென்பேன்.

அன்பன்,

க. அன்பழகன் 

Back to blog