பெண் ஏன் அடிமையானாள் | ஒன்பதாம் அத்தியாயம் – கர்ப்பத் தடை

எட்டாம் அத்தியாயம்

ஒன்பதாம் அத்தியாயம் – கர்ப்பத் தடை

 

கர்ப்பத் தடை என்பதுபற்றிச் சில வருஷங்களுக்கு முன் நாம் கூறியது அநேகருக்குத் திடுக்கிடும்படியான செய்தியாயிருந்தது. ஆனால், இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சாதாரணச் செய்தியாய் விட்டது. வரவர அது செல்வாக்குப் பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர்.சி.பி. சிவசாமி அய்யரும் பெரிய உத்தியோகத்தில் இப்போது இருக்கும் ஜஸ்டிஸ்ராமேசம் அவர்களும் ஆகிய பார்ப்பனர்களும் மற்றும் பலரும் இது விஷயமாக அடிக்கடி பேசி வருகின்றதையும், எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்து வருகின்றோம். சென்னைச் சட்டசபையிலும் கர்ப்பத்தடை விஷயமாய்ப் பிரச்சாரம் செய்யவேண்டுமென்று பிரஸ்தாபிக்கப்பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம்.

ஆனால், கர்ப்பத் தடையின் அவசியத்தைப்பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பச் சொத்துக்கு கருத்தோ இவைகளைப் பிரதானமாய்க் கருதியதன்று. மற்றெதைக் கருதியதென்றால், முன் சொன்னதுபோல, பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும், சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால், சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம். அதுமாத்திரல்லாமல், பல பிள்ளைகளைப் பெறுகின்ற காரணத்தால் ஆண்களும்கூடச் சுயேச்சையுடனும், வீரத்துடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதன் உண்மை, சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் தங்கள் தங்கள் சுதந்திரங்களுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.

ஒரு மனிதன், தன் கஷ்ட நிலையில் பேசும்போது, “நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்துவிடுவேன். 4, 5 குழந்தையும், குட்டியும் ஏற்பட்டுவிட்டதால், இவைகளைக் காப்பாற்றவேண்டுமே என்கின்ற கவலையால் பிறர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாயிருக்க நேர்ந்திருக்கின்றது” என்றே சொல்லுகின்றான். அதுபோலவே, ஒரு ஸ்திரி, புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும்போது, “நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின்மேல் துணியைப் போட்டுக்கொண்டு போய்விடுவேன்; அல்லது ஒரு ஆற்றிலாவது, குளத்திலாவது இறங்கிவிடுவேன்; இந்தக் கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு அரை நிமிஷம் இருக்கமாட்டேன். ஆனால், இந்தக் குழந்தைகளையும், குஞ்சுகளையும் நான் எப்படி விட்டுவிட்டுப் போக முடியும்” என்றே சொல்லுகின்றாள். ஆகவே, இந்த இருவருக்கும் அவர்களது சுயேச்சையையும், விடுதலையையும் கெடுப்பது இந்தக் குழந்தைகள், குஞ்சுகள் என்பவைகளேயாகும்.

உலகத்தில் மக்கள் தங்கள் உடலாலும் அறிவாலும் கஷ்டப்பட்டுத் தத்தம் ஜீவனத்திற்குப் பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்றுச் சுயமரியாதையைப் பலி கொடுத்து அடிமைகளாக வேண்டிய நிலையில் இருக்கும்போது, பிள்ளைகளையும், குட்டிகளையும் காப்பாற்றவேண்டிய அவசியம் தலைமேல் இருக்குமானால், இந்த இடத்தில் எப்படிச் சுயேச்சை இருக்க முடியும்? ஆகையால், இன்றைய நம் உலகில் ஆண், பெண் இருவரினுடைய சுயேச்சைக்கே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்குக் கர்ப்பம் என்பது கொடிய விரோதமாய் இருக்கின்றது. பெண்களுக்குச் சொத்தும் வருவாயும், தொழிலும் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்தே தீரவேண்டியிருக்கின்றது. அதனால்தான் நாம் கண்டிப்பாய்ப் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என்கின்றோம். அன்றியும், பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும், ஆண்களில் பிரம்மச்சாரிகளும், சன்யாசிகளும், சங்கராச்சாரியார்களும், தம்பிரான்களும், பண்டாரச் சன்னதிகளும் எற்பட்டிருப்பதுபோல், பெண்களில் பிரம்மச்சாரிகளும், சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவதற்கும், சுதந்திரத்தோடு வாழவும், பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகவும், பல ஆண்களும்,பெண்களும் போற்றிப்புகழ்ந்து வணங்குபடியான ஸ்தானத்தைக் கைப்பற்றவும் இந்தக் கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது. இந்நிலையில்தான் பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்தவேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். இந்தப்படி நம்மில் ஒவ்வொருவரும் கர்ப்பத்தடை விஷயமாய்க் கருதும் காரணம் எப்படி இருந்தபோதிலும், நமக்கும் மற்றைய கர்ப்பத்தடைக் காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப்பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஆனால், இந்த முக்கியக் காரணங்களில் கொஞ்ச காலத்திற்கு முன் சட்டசபையில் அரசாங்கத்தினர் சார்பாய்ச் சுகாதார மந்திரி கர்ப்பத்தடைப் பிரச்சாரத்தை எதிர்த்ததும், பெண்கள் சார்பாய்ச் சட்டசபைக்குள் சென்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மாளும், அவருக்கு அனுசரணையாய் இருந்ததும் நமக்கு மிக்க ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டன. இந்தத் தேசத்தில் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் இந்த அரசாங்கமே வளர்த்து அவைகளுக்குக் கல்வி கொடுத்து மேஜர் ஆக்கிவிடவேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை இருந்திருக்குமேயானால், சுகாதார மந்திரி அரசாங்கத்தின் சார்பாய்க் கர்ப்பத்தடையை எதிர்த்திருக்கமாட்டார். அப்படிக்கில்லாமல், யாரோ பெற்று யாரோ சுயமரியாதை இழந்து யாரோ அடிமையாய் இருந்து வளர்த்து மக்களைப் பெருக்கிவடுவதானால், சர்க்கார் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல ன்வருவார்கள்? உண்மையான சுகாதாரத்தில் பிள்ளைப் பேற்றைத் தடுப்பது முக்கியமான சுகாதாரம் என்று சுகாதார மந்திரிக்கும், பெண்மணியாய் இருந்தும் டாக்டர் பட்டம் பெற்ற முத்துலட்சுமி அம்மாளுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்க காரியமேயாகும். இந்த விஷயத்தில் அரசாங்கத்தார் விபரீதமான அபிப்பிராயப்பட்டாலுங்கூட பொதுஜனங்கள் அதை லட்சியம் செய்யாமல், ஒவ்வொருவரும் இதைக் கவனித்து, அவரவர்களே தக்கது செய்து கொள்ளவேண்டியது மிக்க அவசியமான காரியமாகும். மதுவிலக்குப் பிரச்சாரத்தைவிட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரச்சாரத்தைவி இந்தக் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் மிக முக்கியமானதென்பதே நமது அபிப்பிராயம்.

ஆதலால், இந்தக் கர்ப்பத்தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி, அதன்மூலம் துண்டுப் பிரசுரங்களும், பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளியிடுவதுடன், கர்ப்பத்தடை சம்பந்தமாக ஆங்கிலத்திலும், பிறபாஷைகளிலுமுள்ள அரிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதுடன், கர்ப்பத்தடையால் - நாடும், நம் பெண்களும், நலத்தையும், சுதந்திரத்தையும் பெறுவதான நாடகம், சினிமா முதலியவைகள் மூலமாய்ப் பிரச்சாரம் செய்யப் பொதுஜனங்களில் சிலராவது இது சமயம் முன்வர வேண்டுமென்றே வேண்டிக்கொள்கின்றோம்.

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

பத்தாம் அத்தியாயம்

Back to blog