பெண் ஏன் அடிமையானாள் | ஆறாம் அத்தியாயம் – விபசாரம்

அய்ந்தாம் அத்தியாயம்

ஆறாம் அத்தியாயம் – விபசாரம்

 

விபச்சாரம் என்னும் வார்த்தையானது அநேகமாய் ஆண், பெண் சேர்க்கைச் சம்பந்தப்ப்டடதற்கே உயோகப்படுத்தப்பட்டு வருகின்றது அதிலும், முக்கியமாக அதாவது, ஒரு பெண் தனக்குக் கணவன் என்றோ, தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றவன் என்றோ, வேசித் தொழிலிலிருப்பவளானாலும் யாராவது ஒரு புருஷனிடம் தற்காலச் சாந்தியாய் தனக்குக் குத்தகையாய் அனுபவிப்பவன் என்றோ சொல்லும்படியான அந்தக் குறிப்பிட்ட ஆண்மகனைத் தவிர, மற்றொருவரிடமோ, பல பேர்களிடமோ சேர்க்கை வைத்துக் கொண்டிருப்பதற்கே கணவனாலும் வைப்புக்காரனாலும், குத்தகைக்காரனாலும் மற்றும் பொதுஜனங்களாலும் சொல்லப்படுகின்ற அதாவது, ஒரு பெரிய குற்றம் சாட்டுவதற்கும், பழி சுமத்துவதற்கும் உபயோகிக்கும் சொல்லாகும். அதனால் அதே பெண்ணை அந்தக் கணவனோ, வைப்புக்காரனோ மற்றொருவருக்குத் தம் சம்மதத்தின் பேரில் கூட்டிவிடுவானானால், அதை அவர்கள் விபசச என்று சொல்லுவதில்லை. இந்தச் சங்கதி பொது ஜனங்களுக்கு தெரிந்தாலும் பெண்ணைத்தான் அவர்களும் வசை கூறிக் குற்றம் சொல்லுகின்றார்களே தவிர, ஆணை விசேஷமாக முன் சொல்லப்பட்ட விபச்சார என்கின்ற முறையில் அநேகமாகக் குற்றம் சொல்லுவதில்லை. அன்றியும், இம்மாதிரிக் குற்றச்சாட்டுதலுக்கும், வசவுக்கும், பழிப்புக்கும் உபயோகப்படுத்துதலும், ஆண்களுக்குக் கிடையாது. அன்றியும், ஆண்களை விபச்சாரர்கள் என்று வைக்கின்ற வழக்கமும் கிடையாது. அப்படிச் செல்லப்படுவதற்காக எந்த ஆணும் கோபித்துக் கொள்வதும் கிடையாது.

ஆகவே, விபச்சாரம் என்னும் வார்த்தையின் அனுபவ தத்துவத்தைக் கூர்ந்து கவனித்துப்பார்த்தால் “விபச்சாரம்” என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய வேறல்ல. ஏனெனில், விபச்சாரத் தோஷம் என்பதும் விபச்சாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்கக் குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கேதான் உண்டேயொழிய, ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையவே கிடையாது.

உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் குறிப்பிடுவோம். அதாவது நமது நாட்டில் இதுவரை விபச்சாரம் செய்வதற்காகவென்று பெண்களைத் தான் பழி சுமத்திக் குற்றம் சொல்லி சாதியை விட்டுத் தள்ளி வைத்திருக்கிறார்களேயொழிய, வீட்டை விட்டுத் துரத்தியிருக்கிறார்களே ஒழிய - அடித்தும், உதைத்தும், வைதும் துன்பப் படுத்தியிருக்கிறாகளேயொழிய - சில சந்தர்ப்பங்களில் கொலைகளுங்கூடச் செய்திருப்பதாக நாம் கண்டதோ கேட்டதோ இல்லை.

நிற்க, சில இடங்களில் விபச்சாரம் ஆண்களுக்குத் தற்பெருமையாகவும், கீர்த்தியாகவும்கூட இருக்கிறதைப் பார்க்கின்றோம். சில ஆண்கள் அதைப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளுவதையும் கேட்கின்றோம்.

மக்களும் விபச்சாரி மகன் என்று சொன்னால்தான் கோபித்துக் கொள்கின்றார்களே தவிர, விபச்சாரகனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை. ஆனால், எந்தச் சமயத்தில் ஆண்கள் கோபித்துக் கொள்கின்றார்களென்றால், தங்கள் மனைவிகள், வைப்பாட்டிகள், குத்தகைத் தாசிகள் விபச்சாரம் செய்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். மேலும் மிகவும் அவமான மேற்பட்டுவிட்டதாகப் பதறுகின்றார்கள், மற்றும் தங்கள் பெண்களைத் தங்களுடைய சம்மதத்தின்பேரில் தங்கள் சுயநலத்திற்காக ‘விபச்சாரத்திற்கு விட இணங்குகிறான்’ என்றோ பெண்ணை அடக்க முடியாமல் ‘ஊர்மேல் விட்டு விட்டான்’ என்றோ சொல்லுகின்றபோது அதிகமாய்க் கோபித்துக் கொள்கிறார்கள். ஆகவே, இந்த அனுபவங்களைக் கொண்டும், பெண்களைக் கலவி விஷயத்தில் ஆண்கள் நடத்துவதைக் கொண்டும் பார்த்தால், மேலே காட்டியபடி அதாவது விபச்சாரம் என்று சொல்லும் வார்த்தையின் தத்துவம் பெண்களை ஆண்களின் அடிமைகள் என்றும், ஆண்களுடைய போக போக்கியப் பொருள்கள் என்றும், விலைக்கு விற்கவும் வாடகைக்கு விடவும் கூடிய வஸ்துகள் என்றும் கருதி இருக்கிறார்கள் என்பதும் இன்னும் தெளிவாய் விளங்கும்.

நிற்க, விபச்சாரம் என்னும் வார்த்தையைப் பழக்கத்தில் ஏன் பெண்களுக்கு மாத்திரம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது? ஆண்களைச் சொல்லுவதற்கு ஏன் அது பயன்படுத்தப்படவில்லை என்று கவனிப்போமானால் அதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படும். அது என்னவென்றால், பொதுவில் விபச்சாரமென்று சொல்லப்படுவது உண்மையாகக் குற்றமுள்ள வார்த்தையாக இல்லை என்பதேயாகும். எதுபோலென்றால், எப்படிக் கற்பு என்ற வார்த்தையும், அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகுமென்றும் சொல்லுகின்றோமே, அதுபோலவே விபச்சாரமென்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும் பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட விளங்கும்.

சாதாரணமாகவே இன்றைய கற்பு விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும். ஜீவ சுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தைகளும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு மாத்திரம் தேவையுடையதாக இருக்கலாம் ஆன போதிலும்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்னவென்றால், மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்களின்மீது சுமத்தப்படாமலும், ஆண்கள் அதற்காகப் பயப்படவோ அவமானப்படவோ கட்டுப்பட்டிருக்கவோ இல்லாமல் இருப்பதும் அதைப்பற்றி லட்சியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சி என்னவென்றால் மக்களில் ஆண்களுக்கும். பெண்களுக்கும் கற்புத் தவறுதலும், விபச்சாரத்தனமும் கூடாதென்று பொதுவாக இருபாலர்களுக்கும் தானாகத் தோன்றாமல் இருப்பதோடு, பலர் கற்பித்தும், அதற்காகப் பல நிபந்தனைகளைக்கூட ஏற்படுத்தியும், மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி, விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிலிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும், விபச்சாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும், ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இணைந்த வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று நடப்புப்பற்று, பிறப்புப்பற்று என்பதெல்லாம் நடுநிலையிலிருந்து தன் அதுபவத்தையும், தன் மனத்தில் தோன்றும் உணர்ச்சியையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக்கொண்டு, பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால், அப்போதும் கற்பு விபச்சாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாக்கவும், கட்டுப்படுத்தவும் உண்டாக்கப்பட்ட சுயநலச் சூழ்ச்சி நிறைந்த தன்மை கொண்டது என்பதும் தானாகவே விளங்கிவிடும். விபச்சாரம் என்பது ஒருவனுடைய பாத்தியதைக்கு ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கு மாத்திரம் விரோதமே தவிர, உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் கூறுவோம்.

மலையாள நாட்டில் இரண்டு மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்படுத்திக் கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. ஆனால், அந்தப் பெண் மேற்கண்ட இரண்டு, மூன்று புருஷர்களைத் தவிர, மற்ற ஆண்களிடம் அதுவும் தங்களுக்கு மனைவியாயிருக்கும் காலத்தில் பிற ஆண்களிடம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் மாத்திரம்தான் அதை விபச்சாரமாகக் கருதி, சில சம்பவங்களில் கொலைகள்கூட நடக்கின்றன.

மற்றும், சில வகுப்புகளில் தங்கள் இனத்தார் தவிர, மற்ற இனத்தாரிடம் சாவகாசம் செய்தால் மாத்திரம் விபச்சாரமாய்க் கருதப்படுகிறது. நமது நாட்டிலும் சில வகுப்புகளிலுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மச்சாண்டார், கொழுந்தனார் (அதாவது புருஷன் சகோதரர்கள்) மாமனார் ஆகியவர்கள் சம்பந்தமானது விபச்சாரத்தனமாக கொள்ளப்படுவதில்லை. இக்கொள்கைகள் நம் நாட்டுப் பழங்குடி மக்கள் மிகுதியும் கொண்ட சில சமூகங்களின் பழக்க வழக்கங்களுடன் கலந்து செல்வாக்கு பெற்றிருப்பதை இன்றும் தாரளமாய்ப் பார்க்கலாம். இதுபோல் இன்னும் பல விஷயங்களும் உண்டு. ஆகவே, இவைகளை எல்லாம் கவனித்து பார்த்தால், விபச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கைமீது பொதுவான ஒழுக்கக் குறைவு என்கின்ற தத்துவத்தில் எப்போதும் பழக்கத்தில் அமலில் இல்லையென்பது விளங்கும்.

நிற்க, மனித சமூகத்திற்கென்று பொதுவாகச் சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என்பதை நாம் அடியோடு ஆட்சேபிக்க வரவில்லை. ஆனால், அவை தனிப்பட்டவர்கள் அதாவது ஆண்டான் - அடிமை முறை, எஜமான் - கூலி, முதலாளி - காரியஸ்தர் முறை, சினேகிதர்கள் முறை போன்ற தன்மைகள் கொண்ட அதாவது தனிப்பட்ட சம்பந்தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகிய ஒழுங்கு கட்டுப்பாடுகள் போலப் பொதுவாழ்விற்குப் பொதுக் கொள்கைகளாயிருக்கக்கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்திற்கும் பாதகம் ஏற்படாததாகவும், அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபட்சம், உயர்வு - தாழ்வு ஆகிய பேதத் தத்துவம் கொண்டதல்லாததாகவும் இருக்கவேண்டுமென்பதோடு, எல்லாவற்றையும்விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்தனவாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் கூட மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்றதனாலேயே எது நியாயம் என்பதற்கு “தர்ம சாஸ்திரங்களைத் தேட வேண்டுமென்பது கருத்தல்ல. மற்றபடி கண்டுபிடிப்பதென்றால், ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லுவதானது பிறத்தியானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால், அவன் - முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்கின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒருப்போன்றதும், அன்றியும் அறிவிற்கும், சாத்தியத்திற்கும், அனுபவத்திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.

இப்படியெல்லாம் இல்லாமல், வெறும் நிர்ப்பந்தத்திற்கும் ஒவ்வாததுமான விஷயங்களுக்காக வலுத்தவர்கள், தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றினபடிக்கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்துகொண்டு போவதானது எவ்விதப்பயனையும் தராததோடு, மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத்தனத்தையும், அறிவுத் தடையையும்தான் உண்டாக்கும்.

சாதாரணமாக, பொது வாழ்க்கையில் ஒருவன் செய்யக் கூடாதென்பாக ஏற்பாடு செய்திருக்கும் திருட்டு என்பதான ஒரு குணத்தை எடுத்துக்கொள்வோம். அது இன்றைய வழக்கில் ஒரு மனிதனுக்கு - அதாவது, திருட்டுக் கொடுத்தவனுக்கு நஷ்டத்தையும், மன வருத்தத்தையும் கொடுக்கக் கூடியதாய் இருக்கின்றது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். ஏனெனில், நமது சொத்தை ஒருவன் திருடினால் நமக்கு அப்படித்தான் இருக்கும். ஆனால், அதனால் அந்த நஷ்டமும், சங்கடமும் எதனால் ஏற்படுகின்றதென்று பார்ப்போமானால் திருட்டுக் கொடுத்தவன் திருட்டுப்போன சொத்தை தன்னுடையதென்றும், அது தனக்கே சொந்தமானதென்றும் எண்ணியிருப்பதால், உலகில் பொருளியல் சமத்துவம் ஏற்படுகின்றவரை திருட்டு என்னும் குணமானது குற்றமாகத்தான் பாவிக்கப்படும். உலகிலுள்ள எல்லாச் சொத்தும் உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம்; ஒவ்வொருவனும் பாடுபட்டுத்தான் சாப்பிடவேண்டும் தேவைக்குமேல் எவனும் வைத்துக் கொள்ளக்கூடாதுபோன்ற கொள்கைகள் ஏற்பட்டுவிட்டால், திருட்டுப் போவதும், திருட்டுப் போனதைப்பற்றிக் கவலைப்படுவதும்தானாகவே மறைந்துவிடும். ஆனால், இப்போது நான் திருடுவது குற்றமல்ல, நீ பொய் சொல்வதுதான் குற்றம்; நான் விபச்சாரம் செய்வது குற்றமல்ல, நீ விபச்சாரம் செய்வதுதான் குற்றம் என்பது போன்றதான “பொது ஒழுக்கங்கள்” என்பவைகளும் “பொதுக் கட்டுப்பாடுகள்” என்பவைகளும் ஒரு நாளும் பொது வாழ்வுக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படாது. இன்று உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் இருந்துவரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிரியாகவும், அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும், தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூழ்ச்சியாகவும் செய்யப்பட்டவைகளாகவே இருக்கின்றன.

கடைசியாக, மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால், சிந்தனை உணர்ச்சியும், இந்திரியச் செயலும், ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய்ப் பசி, நித்திரை, புணர்ச்சி மூன்றும் முக்கியமான, இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங்களின் அதாவது மெய், வாய், கண், மூக்கு செவி ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.

 

ஆகவே, மனிதனது பொதுச் சிந்தனை உணர்ச்சியும், இந்திரியச் செயலும் அவனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. ஆசையின் தன்மையால் எதையும் ஆசைப்படுவதும், அது அநேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின்றோம். ஆகவே, உணர்ச்சியும், இந்திரியச் செயலும், ஆசையும் மனிதனால் சுலபத்தில் கட்டுப்படுத்தக்கூடியவையல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றால் அப்படிப்பட்டவரைப்பற்றி நாம் இங்குப் பேச வரவில்லை. அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னவோ? எனவே, அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும், ஆசையையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப் பாடுகளை ஏற்படுத்தினால், அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமா? என்றுதான் கேட்கிறோம்.

பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகின்றோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லிவிடுகின்றோம். ஆனால், தொழிற்முறைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து, அதனால் பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்துவரும் வக்கீல்களையும், வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவுமின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டும், பெருமையைக் கொண்டும் அம்மக்களைக் கவுரவமாகவே மதிக்கின்றோம். ஆனால், அதுபோலவே, நடக்கும் மற்றொரு தொழிற்காரரை உதாரணமாக, தேவதாசிகள் போன்றவர்களை இழிவாகக் கருதுகின்றோம்.

பொதுவாக, இம்மூன்று பேர்களாலும் மனித சமூகங்களுக்குக் கெடுதியும், நஷ்டமும் இருந்தும், இருவரை ஏற்றுக்கொண்டு, ஒருவரைத் தள்ளுவதானது கேவலமும், சூழ்ச்சியும், சுயநலமுமேயல்லாமல் இதில் நியாயமிருப்பதாகச் சொல்ல முடியுமாவென்று கேட்கின்றோம். எந்தத் தொழிலானாலும் - மற்றவர்களுக்குக் கெடுதியைக் கொடுக்கும் தொழில் எதுவானாலும் அப்படிப்பட்ட தொழில் இல்லாமலே உலகம் நடக்கும் படியாகத்தான் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட விஷயத்தில் மாத்திரம் வேண்டுமானால், இயற்கையை மாற்றிக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது அவசியமாகலாம். அப்படிக்கில்லாமல் ஒருவருக்கு ஒருவிதம் என்பதாக மாற்றுவது பயன்படாததாகவே முடியும்.

எனவே, இப்போது நடைமுறையிலிருக்கும் விபச்சாரம் என்பதும், அதன் தத்துவமும் நாம் மேலே குறிப்பிட்டதுபோல், பெண்களை அடிமைப்படுத்துவதற்காக பெண்கள் – அடிமைகள் என்னும் கருத்தின்மீது ஏற்படுத்தப்பட்டவைகள் ஆதலாலும் அது ஆண்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமலிருப்பதாலும் ஒப்புக்கொள்ள முடியாததாய், காணப்படுவதோடு, பெண்கள் சுதந்திரம், பெண்கள் விடுதலை என்பவைகளுக்காக நடைபெறும் காரியங்களில் 'விபச்சாரம்' என்னும் காரியம் வந்து முட்டுக்கட்டை போடுமானால், அதைத் தைரியமாய் எடுத்தெறிந்துவிட்டு முன்னோக்கிச் செல்லவேண்டியது உண்மையான உழைப்பாளிகளின் கடமையாகுமென்பதையும் குறிப்பிட்டுவிட்டு இப்போதைக்கு இதை ஒருவாறு முடிக்கின்றோம்.

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

ஏழாம் அத்தியாயம் 

Back to blog